Skip to main content

வெடித்த மோதல்; “நான் இல்லையென்றால் தோற்றிருப்பார்” - டிரம்ப்பை விளாசிய எலான் மஸ்க்!

Published on 06/06/2025 | Edited on 06/06/2025

 

Conflict erupts between Trump and Elon Musk

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த அதிபர் தேர்தலில், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்தார். மேலும், இந்த தேர்தலை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்புக்கு ஆயிரக்கணக்கான கோடியை எலான் மஸ்க் செலவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியிருந்தது. 

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக (DOGE) எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இது, அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராகப் பொறுப்பேற்றப் பிறகு, அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வந்தார். அதில், அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கெனவே அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வந்த நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், அமெரிக்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எலான் மஸ்கிற்கு எதிராகவும், டெஸ்லா நிறுவனத்திற்கும் எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. 

இந்த சூழ்நிலையில், பல்வேறு பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் ‘பிக் பியூடிஃபுல்’ (Big Beautiful) சட்ட மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவில், வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த மசோதா, பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், DOGE குழுவின் பணியை குறைத்து மதிப்பிடும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். முதல் முறையாக டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு மாற்று கருத்து சொன்ன எலான் மஸ்க், கடந்த வாரம் ‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

Conflict erupts between Trump and Elon Musk

இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப், “எலானுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது. இனிமேல் அந்த உறவு இருக்குமா? என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மசோதாவின் உள்நோக்கம் என்னவென்று எலான் மஸ்க்குக்கு தெரியும். அவருக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. திடீரென்று அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது, மின்சார வாகன உற்பத்தி வரி சலுகைகளை ரத்து செய்வதற்கு மசோதா கொண்டு வந்ததால் தான் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.  அவர் என்னைப் பற்றி மிக அழகான விஷயங்களைச் சொன்னார், மேலும் அவர் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் மோசமாகச் சொல்லவில்லை. ஆனால் அவரால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்துள்ளேன்” என்று கூறினார். 

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த எலான் மஸ்க், “இது தவறு, இந்த மசோதா எனக்கு ஒரு முறை கூட காட்டப்படவில்லை. அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராலும் அதைப் படிக்கக்கூட முடியாத அளவுக்கு மிக வேகமாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நான் மட்டும் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். டிரம்ப் நன்றி இல்லாதவர், அவர் பொய் சொல்கிறார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்