Skip to main content

வழக்கு விசாரணை; சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடும் அமெரிக்க நீதிமன்றம்...

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

american court seeks chennai high court's help in zoho case

 

கலிபோர்னியாவின் வடக்கு மாகாணத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணை ஒன்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது. 

 

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு துவங்கிய சோஹோ நிறுவனம் மென்பொருள் சேவைத் துறையில் உலகின் மிகமுக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஃப்ரெஷ்வொர்க்ஸ் (Freshworks) என்ற நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தது. சோஹோ நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்நிறுவனம், சோஹோவின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியதாக அந்நிறுவனம் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஃப்ரெஷ்வொர்க்ஸ், அதன் தொடக்கத்திலிருந்தே சோஹோவின் ரகசிய வணிகத் தகவல்களைத் திருடி மற்றும் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தனது வணிகத்தை உருவாக்கியது என்றும், தனிப்பட்ட நிதி தகவல்களையும், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை தகவல்களையும் அந்நிறுவனம் திருடியதாக சோஹோ நிறுவனம் தனது புகாரில் தெரிவித்திருந்தது. 

 

இதுதொடர்பான வழக்கு விசாரணை கலிபோர்னியாவின் வடக்கு மாகாணத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது அமெரிக்க மாவட்ட நீதிமன்றம். அதன்படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவன ஊழியர்களிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை தொடர்பான கோப்புகள் மற்றும் சோஹோவின் தரவுகளைப் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட சாதனத்தின் தடயவியல் நகல், குற்றம்சாட்டப்பட்டவரின் வாட்ஸப் கணக்கை ஆராய்வதற்கான அனுமதி ஆகியவற்றைச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் கோரியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்