Skip to main content

“எங்கள விடுங்க... நாங்க வெளியே போகணும்” - கதறும் இளம்பெண்கள்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

young girls crying are also going viral on social media

 

“எங்கள விடுங்க.. நாங்க வெளிய போகணும்” என கதறும் வெளிமாநில பெண்கள், “அதெல்லாம் அனுப்ப முடியாது.. முதல்ல உள்ள போங்க” என கட்டாயப்படுத்தும் விடுதி ஊழியர்களின் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஏராளமான வெளிமாநில இளைஞர்களும் பெண்களும் வேலை செய்துவரும் நிலையில், அவர்கள் அனைவரும் காண்ட்ராக்டர்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள்.

 

அதுமட்டுமின்றி, இங்கு வேலை செய்துவரும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அவர்களுடைய தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய, தனியார் கல்லூரிகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், எஸ்விஎஸ் மார்க்" என்கிற அடுக்குமாடி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குடியிருப்பில் தங்கியிருந்த இரண்டு வெளிமாநில பெண்கள், தங்களது அறையை காலி செய்துவிட்டு லக்கேஜ் பையுடன் அந்த விடுதியை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது, அந்த விடுதியின் மெயின் கேட்டில் இருந்த செக்யூரிட்டிகள், அந்த இளம்பெண்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக உள்ளே செல்ல கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

மேலும், ஊழியர்களின் நடவடிக்கையால் அச்சமடைந்த இளம்பெண்கள், தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு செக்யூரிட்டிகளிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளனர். அந்த சமயம், அவ்வழியாக சென்ற சிலர், இச்சம்பவத்தை கவனித்துள்ளனர். அப்போது, "என்னம்மா ஆச்சி.. எதுக்கு இந்த பொண்ணுங்கள வெளிய விடமாட்றீங்க" என அவர்கள் கேட்டதற்கு, அந்த  செக்யூரிட்டிகள் பதில் எதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துள்ளனர்.

 

இதையடுத்து, கண்ணீர்விட்டு கதறும் அந்த இளம்பெண்களையும், கேட்டை விட்டு வெளியே அனுப்பாத செக்யூரிட்டிகளையும் அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது, இது சம்மந்தமான வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வைரலான  நிலையில், இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர், விடுதி நிர்வாகத்திடம் விசாரணை செய்து வருவதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
police action for Youth who tried to enter the vote counting center 

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அதோடு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. 

police action for Youth who tried to enter the vote counting center 

இதற்கிடையே தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவாரூரியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி அருகில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று (29.04.2024) இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் வி.டி. நாராயனசாமியும், பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபாலும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Holiday notification for Chennai High Court

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (01.05.2024) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறைக்கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.