
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீட்டில் அழுகிய நிலையில் வயதான தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் அவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள காட்டுபரமக்குடி கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி நாகசுப்பிரமணியன்-தனலட்சுமி. இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் இவர்களின் மகள்கள், மகன்கள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01/05/2025) அன்று தம்பதியின் மகள் ஒருவர் தொலைபேசியில் பெற்றோர்களை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இரண்டு நாட்களாக போன் எடுக்கப்படாததால் அச்சமடைந்த அவர் சந்தேகத்துடன் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனடியாக அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்க்கையில் வயதான தம்பதிகள் நாகசுப்பிரமணியன்- தனலட்சுமி ஆகிய இருவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
நிகழ்ந்தது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இருவர் உடலுக்கும் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை ஆய்வில் இருவரும் சாணி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. வயதான இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் மகன் மற்றும் மகளின் அன்புக்காக ஏங்கி வந்த நிலையில் கிடைக்காததால் விரக்தியில் இருந்ததால் இந்த தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.