Skip to main content

பெண் போலீஸ் தற்கொலை;டார்ச்சர் செய்த கணவன் கைது;மாமியார், மாமனாருக்கு வலைவீச்சு!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

சேலத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர். மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


சேலம் சூரமங்கலம் புது ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி புவனா என்கிற புவனேஸ்வரி (33). இவர்களுக்கு மூன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த ஜூலை 9ம் தேதி முதல் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.


திருமணத்தின்போது புவனேஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், கட்டில், பீரோ, வீட்டு சாமான்கள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்துள்ளனர். ஆனால், வரதட்சணையாக கூடுதல் நகைகள் வாங்கி வருமாறு கணவர் வீட்டில் தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளனர். வரதட்சணை வாங்கி வராமல் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று கவுதமனின் பெற்றோர் தடை விதித்ததோடு, கணவருடன் பேசவும் தடை விதித்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில மாதங்களாக பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து, பணிக்குச் சென்று வந்தார்.

 

police suicide


இது ஒருபுறம் இருக்க, புவனேஸ்வரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கவுதமன் வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதியன்று கணவரை பார்க்கச் சென்றபோதும், அவரை திட்டி அனுப்பி விட்டாராம். இதனால் விரக்தியில் இருந்த புவனேஸ்வரி, செப்டம்பர் 10ம் தேதி அதிகாலையில் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 12ம் தேதி, தற்கொலைக்கு முன் புவனேஸ்வரி எழுதிய வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

 

police suicide

 

அந்தக் கடிதத்தில், மாமியார் சித்ரா, மாமனார் விஸ்வநாதன், நாத்தனார்கள் தேவகி, நித்யா மற்றும் கணவர் கவுதமன் ஆகியோர்தான் என் சாவுக்குக் காரணம் என்று எழுதி வைத்திருந்தார். மேலும், வரதட்சணை கேட்டு கணவரோடு சேர்ந்து வாழ விடாமல் கொடுமை படுத்தினர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கணவரும் சித்ரவதை செய்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து கவுதமனை சூரமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மாமியார், மாமனார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்