Skip to main content

விக்கிரவாண்டி: கிணற்றில் மிதந்த பெண் உடல்!! கொலையா? தற்கொலையா?

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
vikkiravandi

 

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது மேல கொந்தை கிராமம். இங்குள்ள ஏரிக்கரை பகுதியில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஒரு கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அப்பகுதிக்கு சென்ற ஊர்மக்கள் அந்த பெண்ணின் உடலை பார்த்துவிட்டு விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ் கிங்ஸ்லி ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் அப்பகுதிக்குச் சென்று கிணற்றில் இறந்து கிடந்த அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் இறந்து கிடந்த கிணற்றின் மேல் சுவற்றில் ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு துண்டு சீட்டு எழுதப்பட்டு அதன்மீது ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. அதைகண்டெடுத்த காவல்துறையினர் அதிலிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அவர் புதுவை மாநிலம் ஏரி பாக்கத்தை சேர்ந்த மணிமாறன் மனைவி லட்சுமி (35) என்பதும் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் கணவர் வீட்டில் கோபித்துக்கொண்டு விக்கிரவாண்டி அருகில் உள்ள சின்னதச்சூர் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான வீரர்கள் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்