Skip to main content

கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மனைவி; மக்கள் போராட்டம்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Wife passed away in front of husband in bus accident

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருராஜபாளையம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி (52). இவரது மனைவி பரிமளா (48). இவர்கள் இருவரும் கறவை மாடு வளர்த்து வீடுகளுக்கு பால் ஊற்றும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(26.5.2024) மாலை கணவன் மனைவி இருவரும் வீடுகளுக்கு பால் ஊற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் குருவராஜ பாளையம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  ஒடுக்கத்தூரில் இருந்து ஆம்பூர் வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரிமளா மீது அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் கணவன் கண் முன்னே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் முனிசாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அரசு பேருந்து ஓட்டுநரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதி சாலையில் வேகத்தடை இல்லாததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதன்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு; டவர் மேல் ஏறிய வேட்பாளரால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rejection of nomination in by-election; A sensation by the candidate who climbed to the top of the tower

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து கழக நடத்துநர் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத்  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா,திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் அவரின் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சாமி படத்திற்கு போட்ட அகல் விளக்கு; குடிசைகள் எரிந்து நாசம்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Akal lamp for Sami photo; The huts were destroyed by fire

குடிசை வீட்டில் சாமி படத்திற்கு முன் ஏற்றப்பட்ட அகல் விளக்கிலிருந்து தீ பரவி 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் ஈரோட்டில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரத்தில் இன்று நள்ளிரவில் 2 குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் இரண்டு குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.  

இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தியதில் காந்திபுரம் மேடு பகுதியில், கண்ணையன் (65) என்பவர் தனது குடிசையில் சாமி படத்தின் முன்பு அகல் விளக்கில் தீபம் போட்டுள்ளார். அது காற்றின் வேகத்தால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் வீடு அருகே அங்கமுத்து (77) என்பவர் குடிசை வீடு உள்ளதால் இந்த தீ விபத்தில் அவர் வீடும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து நடந்த போது கண்ணையன் மற்றும் அங்கமுத்து ஆகியோர் அவரவர் வீட்டில் இருந்தனர். தீ விபத்து நடந்ததும் அவர்கள் குடிசையை விட்டு வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். எனினும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம், தள்ளுவண்டி, துணிகள், மரக்கட்டில்கள், மிதிவண்டி ஆகிவையும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.