Skip to main content

“எங்கள் கருத்தை சொல்லிவிட்டோம்; குளோபல் டெண்டருக்கு பிறகுதான் முடிவெடுப்போம் என்றார்கள்” - போராட்டக்குழு பேட்டி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

'We have expressed our opinion; they said we will take a decision only after the global tender'- struggle committee interview

 

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில்  புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்குழுவினர் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பரந்தூர் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

 

மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கை, நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றாக கூறப்படுகிறது.

 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர், ''முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏகனாபுரம் கிராமத்தின் பின்பகுதியில் இரண்டு ஓடுதளங்கள் அமைய இருப்பதாக  வரைபடத்தை கட்டினார்கள். அந்த இரண்டு ஓடுதளங்களுக்கு நடுவில் ஒரு ஓடை வருகிறது. அந்த ஓடையானது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அத்தனை ஏரிகளுடைய வெள்ளநீர், அதாவது நீர் நிரம்பிய பிறகு கலங்கள் என்ற பகுதியில் வெளியேறக்கூடிய அதிகப்படியான நீரானது அந்த ஓடை வழியாக ஓடி எந்த விதமான தடையும் இல்லாமல் கொசஸ்தலையாற்றில் கலக்கிறது. அந்த ஓடையானது வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கியமான ஓடை. இந்த விமானநிலைய திட்டத்தால் தடைப்பட்டு, ஒரு காம்பவுண்ட் சுவரோ அல்லது கட்டிடங்களோ கட்டி தடுக்கப்படும் பொழுது பக்கத்து கிராமங்கள் ஏறக்குறைய 30 கிராமங்கள் அழிவை நோக்கிச் செல்லும். வேளாண்மை விவசாயம் பாதிக்கும். சென்னைக்கு கூட அதனால் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படும் என்று பலவகையில் விவரங்களை அடுக்கினோம். இத்தனை விவரங்களையும் உள்வாங்கிய அமைச்சர்கள் முதல்வரிடம் இதை நேரிலே தெரிவித்து நீங்கள் கேட்கின்ற ஒரு நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என்று சொன்னார்கள். ஆனால் மூன்று மாதங்கள் நாங்கள் காத்திருந்தோம். எந்தவிதமான முடிவும் அரசு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் உலகளாவிய குளோபல் டெண்டர் அதாவது கள ஆய்வு, பொருளாதார ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளை நடத்துவதற்காக குளோபல் டெண்டரை அறிவித்து, இருபதாம் தேதி அதற்கான கூட்டங்கள் அரசு சார்பில் நடைபெற்றுள்ளது. அந்த டெண்டர் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததனால் நாங்கள் மீண்டும் அரசின் கவனத்திற்கு எங்கள் கோரிக்கையை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்களின் சார்பில் பேரணியை நடத்தினோம்.

 

n

 

ஆனால் வருவாய் கோட்டாட்சியரும், காவல்துறை தரப்பினரும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் அரசிடம் வைத்த கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது என்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று எங்கள் பேரணியைத் தடை செய்து இந்த பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தனர். அதைத் தொடர்ந்து இன்று மூன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தக் கூட்டத்தில் நாங்கள் மீண்டும் எங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தோம். அங்கு விமான நிலையம் திட்டம் வந்தால் ஏற்கனவே தெரிவித்த பாதிப்புகளோடு புதிய கருத்தாக பக்கத்திலே அரக்கோணம் கடற்படை விமான தளம் அதனுடைய பாதுகாப்பு அம்சங்கள் இந்த விமான நிலையத்தால் பாதிக்கப்படும் அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். வடகிழக்குப் பருவ மழையால் அந்த ஓடை பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மாணவன் இறந்த நிலையில் மூன்று நாட்களாக சடலம் கிடைக்காமல் அண்மையில் தான் சடலம் கிடைக்கப்பெற்றது என்றோம்.

 

அமைச்சர்கள் சார்பில், குளோபல் டெண்டர் நோக்கமே இந்த இடத்தில் வேளாண்மை நிலங்கள் இருக்கிறது; விவசாய நிலங்கள் இருக்கிறது; குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இந்நிலையில் செய்யப்படும் ஆய்வின் அடிப்படையில் நீங்கள் சொல்லியிருக்கின்ற கோரிக்கைகள் குறித்து ஆராயச் சொல்லி இருக்கிறோம். அத்தனை முடிவுகளும் வந்த பிறகுதான் நாங்கள் தெளிவான முடிவை எடுப்போம். அதுவரை நீங்கள் காத்திருங்கள். வேறு எந்த விதமான முடிவுக்கும் நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் பயப்பட வேண்டாம், அச்சப்பட வேண்டாம். விமான நிலையம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவது இந்த ஆய்வுக்குப் பிறகுதான். இப்போது அல்ல. அதனால் நீங்கள் அச்சப்படாமல் காத்திருங்கள். அந்த டெஸ்ட்டிற்காக வரக்கூடிய வல்லுநர்களை நாங்கள் கள ஆய்வு செய்ய அழைத்து வரும்போது உங்களுக்கு அறிவிப்போம். அப்பொழுது உங்கள் போராட்டக் குழு சார்பில் எங்களிடம் கொடுத்த அத்தனை தரவுகளையும் அங்கு தாருங்கள் என்று சொன்னார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

பொன்முடி விவகாரம்; ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு பரபரப்பு கடிதம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (14.03.2024) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.