Skip to main content

செஸ் ஒலிம்பியாட் 2022-ஐ நேரில் காண வாய்ப்பு-தமிழக அரசு அறிவிப்பு

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

chess

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையின் மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட் 2022' என்ற பெயரில் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்றுநோக்க வைக்கும் எனக் கருதப்படுகிறது.

 

20 பேர் கொண்ட இந்திய செஸ் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக இருப்பார் என கடந்த மாதம் 2 ஆம் தேதி அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட இந்திய அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நாராயணன், சசிகிரண், விதித் குஜராத்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை  மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. அகில இந்திய கூட்டமைப்பும், தமிழக அரசும் இணைந்து இந்த செஸ் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட்-2022 தொடரை நேரில் காண அழைத்து செல்லப்படுவர். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நாட்கள் நடைபெறும் போட்டியை 9 சுற்றுகளாக  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்திட வேண்டும். ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்