Skip to main content

“வெற்றிக்கான இலக்குடன் திமுகவினர் வேலை பார்த்தார்கள்..”- அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளிப்படை!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தை சிவகாசியில் துவக்கி வைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். 


“உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பலப்பரீட்சையாக இருந்தது. திமுகவினர், வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு வெறித்தனமாக வேலை பார்த்தார்கள். அதிமுகவினரோ, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால்தான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, முதல்வர், துணை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களின் ஆலோசனையைப் பெற்று, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.

virudhunagar district local body election minister rajendra balaji press meet



 

குடியுரிமைச் சட்டத்தினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராமநாதபுரத்தில் உள்ள பிரச்சனையை அன்வர்ராஜா சொல்கிறார். அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடிய இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.
 

பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றுதான். பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் பலமும் என்னவென்று தெரியும். 25 கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு திமுக போட்டியிடுவது கேவலமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்து நின்றுதான் இத்தனை இடங்களில் வென்றுள்ளது. 
 

நகராட்சி, மாநகராட்சி தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அதற்கு அதிமுக தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் யாருடைய தோல்விக்கும் யாரும் காரணமல்ல. அமமுக பெற்ற வாக்குகளினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் மிகவும் நேர்மையாக நடந்திருக்கிறது. ஒரு சதவீதம் கூட முறைகேடு நடக்கவில்லை. யாருடைய வெற்றியிலும் யாரும் தலையிடவில்லை. அப்படி அதிமுக தலையிட்டிருந்தால், திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. உள்ளாட்சி வேட்பாளர்கள் கம்மல், மூக்குத்தி, தாலியையெல்லாம் அடகு வைத்துத்தான் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற்றவரைத் தோற்றுவிட்டார் என்று அறிவிப்பது எத்தனை  கேவலமானது. இதுபோன்ற ஈனத்தனமான செயலில்,  என்னைப் போன்றவர்கள் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம். 
 

நடந்த தேர்தலில், நாங்கள் சொல்லிச் சொல்லி எதிர்க்கட்சியினரை உசுப்பிவிட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் எதுவும் சொல்லப்போவதில்லை. இனி அடிதான்! நாங்கள் வேகமாக ஓடுவோம் என்பது தெரிந்து, எங்கள் கட்சியினர் எல்லையில் போய் உட்கார்ந்து விடுகிறார்கள். இவர்கள் உட்கார்ந்ததும், பின்னாலேயே வரும் எதிர்க்கட்சியினர் படக்கென்று முந்திவிடுகிறார்கள். இனிமேல் எதுவும் சொல்லாமல் ரகசியக் கூட்டம் நடத்தியே, திட்டம் போட்டு வேலை பார்த்து நகராட்சிகள் அத்தனையையும் கைப்பற்றி விடுவோம்.” என்றார்.  
 

ரகசியக் கூட்டம் நடத்தி திட்டம்(?) தீட்டப்போவது குறித்தெல்லாம், பேட்டியிலேயே அமைச்சர் பகிரங்கமாக வெளிப்படுத்துவதை என்னவென்று சொல்வது?


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.