Skip to main content

குடிமராமத்துப் பணி ஒதுக்கீடு செய்வதில் ஆளுங்கட்சியினரின் தலையீடு! விவசாயிகள் புகார்! 

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

Farmers

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தில் குடிமராமத்துப் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளதாக மன்னம்பாடி விவசாயிகள் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

 

அதில் மன்னம்பாடி பெரிய ஏரியில் குடிமராமத்துப் பணி நடைபெறுவதற்காக ஏரி பாசன விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது. அதில் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஒரு சங்கமும், ஆளுங்கட்சியைச் (அ.தி.மு.க) சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் தலைமையில் ஒரு சங்கமும் செயல்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் பெரிய ஏரி குடிமராமத்துப் பணி நடைபெறுவதற்குப் பெரும்பான்மை விவசாயிகளைக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி சங்கத்துக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ள நிலையில் ஆளுங்கட்சியினரின் ஆதரவை மட்டும் கொண்ட நடேசன் சங்கத்தினர் அப்பணிகளை மேற்கொள்வதற்கு அ.தி.மு.க.-வை சேர்ந்த பொறுப்பாளர்கள் அதிகாரிகளை மிரட்டி அதன்படி அவருக்கு அந்த பணியை அளிப்பதற்கு முயற்சியை மேற்கொண்டனர்.

 

இதனால் இரு சங்கத்தினருக்கும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதற்கு தீர்வுகாண இரண்டு சங்கத்தினருக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலின்போது வாக்களிக்கும் விவசாயிகளிடம் தேர்தலை நடத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடேசன் சங்கத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையை முறையாகத் தெரிவிக்காமல் நடேசன் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு சட்டென்று அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார். எனவே ஆளும் கட்சியினருக்குச் சாதகமாகச் செயல்படும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் மன்னம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளை வைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்" என அதில்  கூறப்பட்டுள்ளது. 

 

மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் பிரவீன்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். 

 

மேலும் தேர்தல் முடிந்ததும் உடனடியாக சார் ஆட்சியரை விவசாயிகள் சந்திக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

இதுபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிமராமத்துப் பணிகளில் ஆளும்கட்சியினரின் தலையீடு உள்ளது என்றும், அதனால் முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறும் எனவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.