Skip to main content

"தி.மு.க. ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை"...- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு...

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். மூன்றாவது நாளான நேற்று (23/12/2020) கடலூர் மேற்கு மாவட்டத்தில் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

 

நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மூத்த நிர்வாகிகள் 10 பேருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த 21 தொழிலாளர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

பின்னர் விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய உதயநிதி, "கடந்த மாதம் கலைஞர் பிறந்த திருக்குவளையில் ஆரம்பித்த என் பிரச்சாரப் பயணம் 13 நாட்களாக தொடர்கிறது. இதில் நான் சந்திக்கும் மக்களைப் பார்க்கும்போது தி.மு.க.விற்குதான் எங்களது ஓட்டு என கூறி வருகின்றனர். இதனால் அடுத்த ஆட்சி நமது ஆட்சி தான். என்னை கைது செய்து பயமுறுத்தலாம் என இந்த அரசு நினைக்கிறது. நான் கலைஞரின் பேரன் யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்த அடிமை ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். ஒன்பதரை வருடம் ஆகிறது. ஏதாவது ஒரு சாதனையை சொல்ல முடியுமா? ஊழல், விலைவாசி ஏற்றம் இதுதான் இவர்களது சாதனையாக உள்ளது. பத்தாயிரம் கோடி ஊழலை ஆதாரத்துடன் தலைவர் கவர்னரிடம் கொடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படுவார்கள். அதனால் ஆட்சி மாற்றத்துக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

வருகிற ஜனவரி 27- ஆம் தேதி சசிகலா வெளியே வருகிறார். ஜெயலலிதா இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. அவர் எப்படி இறந்தார் என யாருக்காவது தெரியுமா? ஒரு சாதாரண மனிதன் இறந்தால் கூட அவரது உறவினர்கள் அவர் எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என விசாரித்து தெரிந்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முதல்வர் எப்படி இறந்தார் என யாருக்காவது தெரியுமா? அடுத்து தி.மு.க. ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை செய்து அதற்குரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் நம்மால்தான் தீர்வு காண முடியும்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வித் திட்டமான குலக்கல்வித் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது. இதனால் தமிழக மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும்.

 

வேளாண் திட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அ.தி.மு.க. அரசு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எந்த வித ஆதரவும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. தமிழக முதல்வர் பச்சை துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார். நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து வருடத்திற்கு நான்கு பேர் என இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒன்று இல்லை என்றிருந்தால் அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100% நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தது, இலவச மின்சாரம் வழங்கியது, ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியது, இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க ஆட்சியில் தான். தலைவர் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வென்றெடுப்போம் என கூறுகிறார். அது அவரது தாராளத்தை கூறுகிறது. நான் சொல்கிறேன் 234 தொகுதிகளில் 234 தொகுதியையும் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞர்தான் வேட்பாளர் என நினைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

பிரச்சார பயணத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் முந்திரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.