Skip to main content

காய்கறிகளை வங்கியில் டெபாசிட் செய்யச் சென்ற வாழ்வுரிமைக் கட்சியினர்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

tvk struggle in pudukottai

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. 

 

அப்போது, இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் நாளைய தலைமுறைக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், இன்றே உணவுப் பொருட்களை ஸ்டேட் பேங்க்கில் டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று மாவட்டச் செயலாளர் அகமது தலைமையில், நிர்வாகிகள் காய், கனி, தேங்காய் மாலை, நாற்றுகள், ஏர்கலப்பைகளுடன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். நூதன முறையில் பேரணியாக வங்கி நோக்கிச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினார்கள்.



இது குறித்து மாவட்டச் செயலாளர் அகமது கூறும் போது, இந்திய விவசாயத்தை முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்பது பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள்களை, சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.


இதுவரை, உணவுப்பொருள்களைப் பதுக்கிவைக்க முடியாத நிலை இருந்தது. இந்தப் புதிய சட்டம், எவ்வளவு உணவுப்பொருள்களை வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம், எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம் என்பதை அனுமதிக்கிறது. அதைப் பயன்படுத்தி, செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, எவ்வளவு வேண்டுமானாலும் விலையை உயர்த்தி விற்பார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஏழை எளிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிடும்.



இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால், `ஒப்பந்தச் சாகுபடி’ என்ற பெயரில் இந்திய விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. வேளாண் விளைபொருள்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனத்தினர் முன்கூட்டியே தீர்மானிப்பார்கள். `இது நல்லதுதானே...’ என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், விளைபொருள்களின் தரம் குறித்து ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பார்கள். `அந்த நிபந்தனைகளின்படி விளைபொருள்கள் இல்லை’ என்று சொல்லி, தீர்மானிக்கப்பட்ட விலையைத் தர மறுக்கும் நிலைதான் உருவாகும். மேலும், இந்திய மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வது என்பதற்கு பதிலாக, ஏற்றுமதிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது என்ற நிலை ஏற்படும்.



நிலம் மட்டும் விவசாயிகளின் பெயர்களில் இருக்கும். மற்ற அனைத்தையும் இதன் மூலம், விதைத்தது எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சொந்தமாக இருக்கும். இந்திய விவசாயிகளை மத்திய அரசு கைகழுவிவிடுகிறது.



`ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவிகிதம் பேர் சிறு, குறு விவசாயிகள். இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத் தாண்டி வர மாட்டார்கள். எனவே, இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும்.

 

Ad

 

`ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது ஒரு வெற்று முழக்கம். சட்டங்களைத் திரும்பப் பெற அழுத்தம் கொடுக்க வேண்டிய மாநில அரசு ஆதரவு கரம் நீட்டியிருப்பது சொந்த மாநில மக்களையே வஞ்சிப்பதாக உள்ளது. விவசாயிகளை வஞ்சித்து அழிக்கும் சட்டத்திற்கு ஆதரவு கரம் உயர்த்திய அ.தி.மு.க எம்.பி ரவீந்திநாத் பதவி விலக வேண்டும். சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் பெரிய போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.