Skip to main content

ரேஷன் அரிசியை கடத்திய கும்பல்; திருச்சி போலீசார் அதிரடி

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

 trichy  police ration shop rice action

 

திருச்சி மாவட்டம், தென்னூர், சவேரியார் கோயில் தெரு அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன், ஆய்வாளர் கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஷேக் முக்தார், மதியழகன், முத்துக்குமார், ஈஸ்வரன், ஆறுமுகம் என தெரியவந்தது.

 

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களைச் சோதனை செய்த போது, 50 கிலோ எடை கொண்ட 225 மூட்டைகளில் 11,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருச்சி தென்னுரைச் சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா என்பவர்தான் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மதியழகன், அவர் வீட்டிற்கு எதிரே உள்ள காலி இடத்தை ரேஷன் அரிசியைக் கள்ளத்தனமாகப் பதுக்கி வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி,  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

 

பிடிபட்ட ஐந்து பேரையும் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களையும், அதில் இருந்த 11,250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரூபாய் 82 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றிய போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாபு என்கிற சாதிக் பாட்ஷா தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்