திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காணும் பொங்கல் மறுநாள் தை 4 ஆம் நாளில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு எருது விடும் விழாவிற்காக அரசு விதிமுறைப்படி விழா குழுவினர் கடந்த மாதம் 16 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வழங்க மனு அளித்துள்ளனர்.
அதன் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். எருது விடும் விழா 18 ஆம் தேதி நடைபெறுவதாக விழா குழுவினர் அறிவித்து துண்டு பிரசுரங்கள் அச்சடித்து, தடுப்புகள், ஒலிபெருக்கி, மந்தை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்து முடித்துள்ளனர்.
திடீரென மாவட்ட நிர்வாகம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும், காப்பீடு கட்ட வேண்டும், தேசிய விலங்குகள் நல வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து விழாக்குழுவினர், ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும், (வெப்சைட்) ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் 18 ஆம் தேதி எருது விடும் விழா நடைபெறாது என்று அறிந்த கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து 17 ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 10 வரை வெள்ளைகுட்டை கிராமத்திலும், ஆலங்காயத்திலிருந்து வாணியம்பாடி செல்லும் முக்கிய பிரதான சாலையான மேல் நிம்மியம்பட்டு என்ற இடத்திலும் 2 பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் டி.எஸ்.பிக்கள் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், ‘எங்கள் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றே ஆக வேண்டும்’ என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பெரிய அளவிலான பாத்திரத்தை வைத்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் பானுமதி தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஓரிரு நாட்களில் எருது விடும் விழா நடப்பதற்கான ஏற்பாடு செய்து தருவதாக அவர்களிடம் கூறி சமாதானம் செய்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் 5 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்படதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் வேலை முடித்து பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.