Skip to main content

ஏரல் கொடூரம்... ஆட்டோ ஏற்றி எஸ்.ஐ.கொலை... கொலையாளி காவல்நிலையத்தில் சரண்! 

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

thoothukudi incident

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகரில் கொற்கை விலக்கு அருகில் வாடகை வீட்டில் குடியிருக்கும் முருகவேல் (40), அங்கு டூவீலர் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். தாட்டியமாகப் பேசும் குணம் கொண்ட முருகவேலின் சொந்த ஊர் ஆறுமுகமங்கலம் அருகிலுள்ள தீப்பாச்சி கிராமம்.

 

நேற்றிரவு முருகவேல் சுமார் ஏழுமணியளவில் ஏரல் சாலையில் பானிபூரி விற்பவரிடம் போதையில் பானிபூரி கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.ஐ. பாலுவும் போலீஸ்காரர்களும் முருகவேலை எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதையடுத்து முருகவேல் வீட்டிற்குப் போயிருக்கிறார். இந்த நிலையில் இரவு 10 மணி வாக்கில் பஸ் நிலையத்தின் ஓட்டல் ஒன்றில் தகராறு நடப்பதாக காவல் நிலையத்திற்குத் தகவல் வர, எஸ்.ஐ. பாலுவும் உடன் போலீசாரும் அந்தக் கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்றபோது பானிபூரிகாரரிடம் தகராறு செய்த முருகவேல், டிபன் பொருட்டு ஓட்டலில் தகராறு செய்தது தெரியவர, முருகவேலையும் அவர் வந்த லோடு ஆட்டோவுவையும் காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார் எஸ்.ஐ.பாலு.

 

thoothukudi incident

 

அங்கு நடந்த விசாரணையில் முருகவேல் போதையிலிருப்பது தெரியவர அவரை காலையில் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அனுப்பிய எஸ்.ஐ. பாலு, அவரது லோடு ஆட்டோவை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். லோடு ஆட்டோவைப் பிடித்துக்கொண்ட ஆத்திரத்தில் முருகவேல் வீடு திரும்பியிருக்கிறார்.

 

இதனிடையே இரவு 12 மணிக்கு மேல் வழக்கம் போல் நைட் ரவுண்ட்ஸ் சென்ற எஸ்.ஐ. பாலு, தனது டூவீலரில் தலைமைக் காவலர் பொன் சுப்பையாவுடன் சென்றிருக்கிறார். பஜாரில் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு, இரவு ஒருமணியளவில் எஸ்.ஐ. பாலு, கொற்கை விலக்கு பக்கமுள்ள வீட்டின் முன் தொட்டி ஆட்டோவுடன் ஒருவர் நிற்பதைப் பார்த்து அங்கேவர, அந்த வீட்டின் முன், மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு காரணமான முருகவேல் நின்றிருக்கிறார். ''வீட்டுக்குப் போகவில்லையா. ஏன் இந்த நேரத்தில் இங்க நிக்கிற'' என்று எஸ்.ஐ.பாலு கேட்டபோது, தனது வீட்டின் சொந்தக்காரரின் தொட்டி ஆட்டோவிலிருந்த முருகவேல், ''என்னோட ஒர்க் ஷாப்பைத் திறக்கப் போகிறேன்'' என்று அவர்களிடம் சொல்ல, அவரை வீட்டுக்குப் போகச் சொல்லி கண்டித்த எஸ்.ஐ.பாலுவும் தலைமைக் காவலரும் அந்த இரவில் ஸ்டேஷன் திரும்பியிருக்கின்றனர்.

 

thoothukudi incident

 

இரண்டு சம்பவத்தில் தன்னை எஸ்.ஐ. கண்டித்ததோடு தனது ஆட்டோவையும் பிடுங்கிக்கொண்ட ஆத்திரத்தில் அந்த தொட்டி ஆட்டோவில், எஸ்.ஐ. பாலுவைப் பின் தொடர்ந்த முருகவேல், வேகமாகச் சென்று எஸ்.ஐ. பாலு சென்றுகொண்டிருந்த பைக்கின் பின்னே மோதித் தள்ளியிருக்கிறான். மோதிய வேகத்தில் எஸ்.ஐ.பாலு நெஞ்சில் அடிபட்டு மயங்கியிருக்கிறார். உடன் வந்த ஏட்டு பொன்.சுப்பையாவின் கால்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைகாக ஏரல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே பாலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஏட்டு பொன்.சுப்பையாவுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. தகவலறிந்தவுடன் தாமதமில்லாமல் ஏரல் காவல் நிலையம் வந்த எஸ்.பி.ஜெயக்குமார், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

thoothukudi incident

 

இதனிடையே முருகவேல் நேற்று (01.02.2021) விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். பலியான எஸ்.ஐ.பாலுவுக்கு வயது (56) தூத்துக்குடி பக்கமுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சார்ந்தவர். திருமணமாகி, மனைவியும் ஒரு மகன், மகள் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 

thoothukudi incident

 

thoothukudi incident

 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், உடற்கூறு செய்யப்பட்ட எஸ்.ஐ. பாலுவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், தென்மண்டல ஐ.ஜியான முருகன், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் முடிவைத்தானேந்தல் கொண்டு வரப்பட்டு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

ஆட்டோ கொண்டு மோதி எஸ்.ஐ. படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.