
கஞ்சா வியாபாரியால் அடித்து கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமார்
மதுரை உசிலம்பட்டியில் காவலர் கஞ்சா வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் காவலர் முத்துக்குமார். மது அருந்தி கொண்டிருந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு இனி கஞ்சா விற்க வேண்டாம் என காவலர் முத்துக்குமாரும் அவருடைய ராஜாராமும் அறிவுரை வழங்கியுள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக கஞ்சா வியாபாரியால் இருவரும் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் மீது கல்லைத் தூக்கி போட்டதில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் ராஜாராம் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் அண்மையில்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்திருந்த நிலையில் அரங்கேறிய இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென காவலர் முத்துக்குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை வரை இந்த சம்பவம் எதிரொலித்தது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி பொன்வண்ணன்
தேனி கம்பம் மலைப்பகுதியில் முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மதுரை சரக டிஐஜி தலைமையில் தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதவியோடு சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் 200 மேற்பட்ட போலீசார் வருசநாடு மலையை சுற்றிச் வளைத்திருந்தனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பொன்வண்ணனை போலீசார் கைது செய்ய முயன்ற போது பதிலுக்கு அவர் தாக்க முயன்றதால் போலீசார், கஞ்சா வியாபாரியை பொன்வண்ணனை என்கவுண்டர் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.