
கேரளாவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 39). இவர் சென்னை ரெட்டேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மது போதையில் இருந்த முனியசாமி, அங்குள்ள ஒரு கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்லம் பாஷா என்பவரின் பிறப்பு உறுப்பை கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் சில நாட்களில் ரெட்டேரி அருகே பாலாஜி என்பவரின் பிறப்பு உறுப்பையும் முனியசாமி கடித்துள்ளார். இதில் பாலாஜி படுகாயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த இரு வழக்கு தொடர்பாக முனியசாமி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் முனியசாமி வெளியே வந்தார். இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த வழக்கில் முனியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து முனியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முனியசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாதவரம் அருகே உள்ள ஒரு வீட்டில் முனியசாமி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.