Skip to main content

வக்கீல் மீது கொலை வெறித் தாக்குதல்... தீர்ப்பால் பாதிக்கப்பட்டவரின் கொடூரச் செயல்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

thirunelveli lawyer incident

 

 

நெல்லையின் பாளை பகுதியைச் சேர்ந்த பிரபலமான வழக்கறிஞர் பிரம்மா. எந்நேரமும் வழக்குகளால் பரபரப்பாக காணப்படுபவர். தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்கள் மற்றும் அரசு சம்பந்தமான வழக்குகளின் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஆதாரங்களைத் திரட்டி வழக்காடும் பிரம்மா, நுகர்வோர் நீதிமன்றங்களிலும் பொதுமக்களுக்காக வாதாடி வெற்றி பெற்றவர். குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவுபவர். ஊடகங்களின் முற்றுகைக்கும் உட்டபட்டவர் பிரம்மா.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பாளையில் செயல்பட்ட மதுரம் ஹோட்டலுக்கு எதிரான அதன் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரம்மா மூலம் வழக்கு தொடுத்ததில் பிரம்மா வெற்றி அடைந்திருக்கிறார். இதனால் அவர் மீது எதிர்தரப்பு வன்மம் கொண்டிருந்தது. இதனிடையே நேற்றிரவு பிரம்மா தன் நண்பர்களுடன் முருகன் குறிச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுரம் ஹோட்டல் கிளையில் காபி சாப்பிட சென்றவர் சப்ளையரிடம் சுவீட் காபி ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தனர்.

 

அந்த சமயம் ஹோட்டல் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என 10 பேர்கள் அவர் பக்கம் வந்தவர்கள், திடீரென வக்கீல் பிரம்மாவிடம், நீ தானே அரசு அதிகாரிகளிடம் தகவலரியும் உரிமைச் சட்டங்களின் விவரங்களை வாங்கி எங்களுக்கு எதிராக வழக்குத்தொடுத்தாய். என்று கத்திக் கொண்டே திடீரென அவர் முகத்தில் சுடுகிற வெந்நீரை ஊற்றினர். வலி பொறுக்கமாட்டாத பிரம்மா அலறினார். உதவிக்கு வந்த அவரது நண்பரை மிரட்டி விட்டு ஹோட்டலின் ஷட்டரை இழுத்து மூடிக் கொண்டு பிரம்மாவைச் சூழ்ந்து கொண்டுத் தாக்கினர். இதனை பிரம்மாவின் நண்பர் தன் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். தகவலறிந்த பாளை உதவிக் கமிஷ்னர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் ஸ்பாட்டுக்கு வந்து படுகாயமடைந்த வக்கீல் பிரம்மாவை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

 

இதையறிந்த வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் சூரிய நாராயணன் தலைமையில் வக்கீல்கள் ஓட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரம்மாவைத் தாக்கிய ஓட்டல் அதிபர், ஊழியர்களைக் கைது செய்யக் கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பானது. நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் வாக்குறுதிகொடுத்த பிறகே போராட்டம் வாபஸானது.

 

இதுகுறித்து பிரம்மா பாளை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, ஓட்டல் உரிமையாளர் தரப்பிலும் பிரம்மா மீது புகார் தரப்பட்டிருக்கிறது. தாக்குதல் காரணமாக ஓட்டல் உரிமையாளர் அருணாசலத்தின் மகன்களான ஹரிஹரன், மணிசங்கர் மற்றும் ஊழியர்கள் 4 பேர்கள் விசாரணைக்காகப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஹோட்டல் மூடப்பட்டது. நெல்லையில் வக்கீல் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் வழக்கறிஞர்களின் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.