Skip to main content

மணல் கொள்ளை ஊழலே அணைகளின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணம் : சு. திருநாவுக்கரசர்

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
mukkombu


மணல் கொள்ளை ஊழலே அணைகளின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
 

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
 

            திருச்சி முக்கொம்பு உள்ளிட்ட சில அணைகள் உடைந்தும், இன்னும் சில அணைகள் கண்காணிக்கப்பட்டு சீர் செய்யவேண்டிய நிலையில் உள்ளதை தமிழக பொதுப்பணித்துறை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் அணைகளை சீர்செய்யவும், பராமரிக்கவும் வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தலைமை பொறியாளர்கள், வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினை அமைத்து தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளையும் பார்வையிட்டு, பழுதுபட்டு இருக்கிற அணைகளை சீர்செய்யவும், எதிர்காலத்தில் இதுபோல அணைகள் உடையாமல் இருக்க பலப்படுத்துகிற பணியையும் உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். இதற்கு தேவையான நிதியை உடனே தமிழக அரசு ஒதுக்கவேண்டும். 

 

            தமிழக ஆற்றுப்பகுதிகளில் அணைகளுக்கு அருகில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு, நடைபெற்று வரும் மணல் கொள்ளை ஊழலே அணைகளின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். மணல் கொள்ளை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெரும் மழையால் பக்கத்து மாநிலங்களிலிருந்து அதிக நீர்வரத்து இருந்தும் கூட, காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை. கடைமடை பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் போய்ச்சேரவில்லை. தண்ணீர் செல்லும் வழித்தடங்கள், வாய்க்கால்கள் சரியாக தூர்வாறப்படாமலும், ஆங்காங்கே உடைப்பு ஏற்படும் நிலையில் பலவீனமாக உள்ளதுமே காரணமாகும். கால்வாய்கள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாறப்பட நிதி ஒதுக்கி, ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும். 

 

 

 

            இத்தகைய பணிகளை வேகமாகவும், முறையாகவும் செய்திட ஒரு வல்லுநர் குழுவையும், செயல்பாட்டுக் குழுவையும் பிரத்யேகமாக தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்