Skip to main content

போலீசுக்கே போனஸ்;அழும் கொள்ளையர்கள்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறீங்களே சார்?” என்று நண்பர் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் சொல்லியிருக்கிறார்.  அவரோ “நான் சொல்லுறதெல்லாம் சரிதான். இது தீபாவளி நேரம். போலீஸுக்கு அவனுங்க போனஸ் போடணும்ல. அதான்.. வேகவேகமா பூட்டியிருக்கிற வீடுகள்ல நகையும் பணமும் கொள்ளை போகுது.” என்று சிரித்திருக்கிறார். நேர்மையான அந்த அதிகாரி பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் “அப்படின்னா.. போலீஸ்காரங்க யாருகிட்ட போனஸ் வாங்குறாங்க? உங்க சிரிப்புக்கு அர்த்தம் புரியல..” என்று நண்பர் துளைத்தெடுக்க..  “இன்னுமா விளங்கவில்லை? யூனிபார்முக்கு இருக்கிற மரியாதையைக் கழற்றி வைத்துவிட்டு, சில போலீஸ்காரர்கள் பலே திருடர்களிடமும், கொள்ளைக்காரர்களிடமும் மாமூல் வாங்குவதோடு மட்டுமல்லாமல், தீபாவளி போனஸும் வாங்குகிறார்கள். இதெல்லாம்.. காவல்துறை மட்டத்தில் சாதாரணமா நடக்கிறதுதான்.” என்றிருக்கிறார்.

அந்தக் காவல்துறை அதிகாரி அப்படி பேசியதன் பின்னணி இது -  


 

 Thief and Diwali Bonus ..

 

அமமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார் விருதுநகர் மாவட்டம் – கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த சந்தோஷ்குமார். இவர்,  இரண்டு நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, பரமக்குடியிலுள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இன்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சந்தோஷ்குமாருக்குத் தகவல் தெரிவித்தனர். வீட்டில் வைத்திருந்த 85 பவுன் நகைகளும் ரூ.5.45 லட்சம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது. கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் நெல் வியாபாரி முருகன், இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நாயுடு தெருவிலுள்ள அவருடைய வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. 40 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.
 

 Thief and Diwali Bonus ..

 

“ஒரே இரவில் ஒரே தாலுகாவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தீபாவளி நெருங்கி விட்டதல்லவா? திருடர்களும் பிசியாகிவிட்டனர். பக்கத்து தாலுகாவிலுள்ள சேத்தூரிலும், திருடன் ஒருவன் நள்ளிரவில் வீடு புகுந்து சிவசக்தி என்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். விருதுநகர் மாவட்டத்தில்தான் இந்த மூன்று சம்பவங்களும் நடந்திருக்கின்றன.” என்று நண்பரிடம் கண் சிமிட்டினாராம் அந்த அதிகாரி.

 

 Thief and Diwali Bonus ..

 

போலீஸ்காரர்கள் சிலர் திருடர்களிடம் எப்படி போனஸ் வாங்குகிறார்களாம்?
 

“டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் நேரடியாக திருடர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கான்ஸ்டபிள் லெவலில் உள்ளவர்கள்தான் போன் தொடர்பில் இருப்பார்கள். பின்னாளில், மாமூலோ, போனஸோ வாங்கிய விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டாலும், மாட்டுவது கான்ஸ்டபிள்கள்தான். அதிகாரிகள் தப்பித்துவிடுவார்கள். திருடனின் வெயிட்டைப் பொறுத்து போனஸ் கறக்கப்பட்டுவிடும். சின்ன லெவலில் இருந்து, அதாவது ஜவுளிக்கடையில் துணி எடுப்பது போலீஸ்காரர்கள் என்றால், பில்லுக்குப் பணம் செலுத்துவது திருடர்களாக இருப்பர். பெரிய லெவல் என்றால், நகைக்கடையில் போலீஸ்காரர்கள்  வாங்கும் நகைகளுக்கு திருடர்கள் பில் செட்டில் செய்வது விடுவார்கள். போனஸை பணமாக வாங்குவதெல்லாம் ரொம்ப ரொம்ப லோ லெவல்..” என்று நம்மிடம் திரியைப் பற்ற வைத்தது ஒரு கான்ஸ்டபிள்தான்.

 

 Thief and Diwali Bonus...

 

திருடன் – போலீஸ் விளையாட்டு சின்ன வயதிலிருந்தே நாம் ஆடி வருவதுதான்! திருடனும் தீபாவளி போனஸும் பலரும் அறிந்திடாத சங்கதியாக உள்ளது. அப்புறம் இன்னொரு விஷயம்.. மேற்கண்ட கொள்ளைகளுக்கும் அந்த லிமிட்டிலுள்ள காவல்துறையினருக்கும் ‘முடிச்சு’ போட்டு விடாதீர்கள்!  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.