
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்(12.6.2025) மதியம் 1.39 மணிக்கு பேயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை(விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.
இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விமானம் வெடித்துச் சிதறி விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்த 241 பேரும் ஏகப்பட்ட கனவுகளையும், லட்சியங்களையும், சந்தோஷத்தையும் தன்னுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு அந்த விமானத்தில் பயணித்திருந்தனர். ஆனால், அவை எல்லாம் தற்போது அகமதாபாத் காற்றோடு கரைந்திருக்கிறது.
அந்த வகையில் தான், தனது கணவருடன் சேர்ந்து லண்டனில் புதிய வாழ்க்கையை தொடங்கவிருந்த அங்கிதா விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். குஜராத் மாநிலம் மெஹ்சானாவை சேர்ந்தவர் அங்கிதா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. வசந்த் லண்டனில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதனால் திருமணமான சில தினங்களிலேயே மனைவியை பிரிந்து லண்டனுக்கு சென்றுவிட்டார். விசா கிடைப்பதில் தாமதமானதால் அங்கிதா மட்டுமே குஜராத்திலேயே தங்கிவிட்டார். கணவன் லண்டனிலும், மனைவி இந்தியாவிலும் தவித்து வந்த நிலையில் அங்கிதா லண்டன் செல்வதற்கான விசா கிடைத்துள்ளது. தனது கணவருடன் சேர்ந்து வாழப்போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும், எதிர்கால கனவுகளுடனும் நேற்று முன் தினம்(12.6.2025) ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அங்கிதாவை மரணம் தழுவிக் கொண்டது. மனைவி வருவார் என்று லண்டனில் காத்திருந்த வசந்துக்கு மனைவியின் மரணச் செய்தி மட்டுமே வந்து சேர்ந்தது மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.