Skip to main content

தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு வீடு கட்ட உதவி செய்த திமுக பிரமுகர் 

Published on 24/05/2020 | Edited on 25/05/2020

 

thanjavur peravurani


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி பெரியகத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பவுன்துரை (30). இவரது மனைவி அருள் சோபியா (27). இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
 


கரோனா ஊரடங்கால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு மின்கசிவு ஏற்பட்டு அவர்களது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. 

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்தில், வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள், டிவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், செலவுக்கு வைத்திருந்த ரொக்கப்பணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கருகி சாம்பலானது. இதனால் கட்டிய துணிகளோடு அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்தனர். 
 


இது குறித்து தகவலறிந்த, தி.மு.க. பிரமுகர் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், தி.மு.க. தலைமைக்கழகப் பேச்சாளர் அப்துல் மஜீத்துடன் சாலை வசதி இன்றி, தனித்தீவாக இருக்கும், பெரியகத்திக்கோட்டைக்கு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட தம்பதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குப் பயன்படும் வகையிலான ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மளிகை, காய்கறிகள், புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் அவர்கள் குடியிருக்க உடனடியாக குடிசை வீட்டை மீண்டும் சீரமைப்பதற்கான செலவு தொகை ரூ 10 ஆயிரம் பணத்தையும் வழங்கினார். 
 

உதவியைப் பெற்றுக் கொண்ட ஜான் பவுன் துரை, "கரோனா ஊரடங்கு காரணமாக, வேலை இன்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் இச்சூழலில், குடிசையையும், இழந்து விட்டோம். தகவல் அறிந்து வந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் வீடு கட்ட உதவி செய்ததை மறக்க முடியாது" என்றார். முன்னாள் பேரூராட்சி தலைவரின் இந்த மனிதநேயச் செயலுக்கு, பலரும் பாராட்டினார்கள். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.