
தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மூன்று லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து மட்டும் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழ கூழ் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது மாங்காய் மற்றும் மாம்பழத்தின் கடும் வீழ்ச்சியால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒன்றுக்கு 30,000 இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மா சாகுபடி விவசாயிகளின் துயரங்களை போக்குவதற்கு தற்போதைய திமுக அரசு முன்வரவில்லை' என கண்டித்து கே.பி.முனுசாமி, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பாலகிருஷ்ண ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.