
டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்கான சந்தேகத்திற்குரிய காரணம் இருந்தாலே இதுபோன்று சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது' என வாதிடப்பட்டது.
ஆனால் நீதிபதிகளோ 'இதுபோன்ற சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும் கூட சீல் வைப்பதற்கு எந்தவித அதிகாரமும் அமலாக்கதுறைக்கு இல்லை' எனத் தெரிவித்தனர். கடந்த முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்க இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் வீடுகள் அலுவலகங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றத் தயாராக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் 'ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட கணினி ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இருவர் வீடுகளில் நடைபெற்ற சோதனை என்பது சட்ட விதிகளை மீறியது. அமலாக்கதுறையால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதால் சோதனை நடத்துவதற்கும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.