பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஐந்து பேர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதேநேரம், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி திருவள்ளூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குநர் (சட்டம்) பூபதி, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநராக பணியாற்றி வந்த முருகேசன் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும் இடமாறுல் செய்யப்பட்டு உள்ளனர்.

மூவருக்கு பதவி உயர்வு:
இடமாறுதலை அடுத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூவருக்கு முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணன் முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்த்தப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கும், நாகப்பட்டினம் மாவட்டக் கல்வி அலுவலர் வேதரத்தினம் பதவி உயர்வு பெற்று சென்னை தொடக்கக்கல்வி அலுவலக துணை இயக்குநராகவும் (சட்டம்), திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் ராமன் பதவி உயர்த்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.