Skip to main content

வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

tamilisai soundararajan


 

வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என்று பாஜக சொல்லியிருக்கிறது. தமிழக அரசு இதனை முறையாக அணுகியிருக்கிறது. இப்போதைக்கு திருச்சியில் திமுக தலைமையிலான போராட்டத்தின் அவசியம் என்ன? 
 

போராட்டத்தில் மோடியை உள்ளே விடமாட்டோம் என வைகோ கூறியுள்ளார்.  அறிவாலயத்திற்குள் உள்ளே விடுவார்களா இல்லையா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கிறார் வைகோ. வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? 

தமிழக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் பிரதமர் வருவார். தமிழக மக்களின் அத்தனை கூட்டங்களிலும் பங்கு பெறுவார்கள். மக்களின் துன்பத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான் கஜா புயல் துவங்கிய முதல் நாளே முதல் அமைச்சருடன் பேசியிருக்கிறார்.


மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் வந்திருக்கிறார்கள். நான் ஏறக்குறைய 7, 8 நாட்கள் தங்கியிருந்தேன். எங்கள் கட்சியின் தொண்டர்கள் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
 

ஸ்டாலின் அவர்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு எத்தனை நாட்கள் சுற்றுப் பயணம் செய்தார்?. கலைஞரை தேர்ந்தெடுத்த திருவாரூர் பகுதி எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு தெருத் தெருவாக சென்றார்களா? வைகோ எத்தனை நாள் சென்றார்?. ‘
 

முழுமையாக மக்களின் துன்பத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருக்கின்ற மத்திய ஆட்சியை தொடர்ந்து குறைக்கூறிக்கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இழந்த தென்னை மரங்களை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தென்னை விவசாயிகளுக்காக நடந்த கருத்தரங்களில் நான், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டோம். சேதமடைந்த படகுகளை மறுசீரமைப்பது குறித்த ஆலோசனையில் மீனவர்களுடன் கலந்து கொண்டோம். மக்களை மீட்டெடுக்க முயற்சி செய்கிறபோது, எதிர்மறை அரசியலை ஸ்டாலின் குழுவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
 

தமிழ்நாட்டில் மழையே பெய்யவில்லை. புல்லே வளரவில்லை. தாமரை எப்படி மலரும் என்று ஸ்டாலின் பேசுகிறார். அவர் பேசி முடித்தவுடன் மழை வருகிறது. தாமரை மலரப்போகிறது. இயற்கையாக மழைவரவில்லை என்றால், இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப உதவியுடன் செயற்கையாக மழையை வரவழைத்து குளங்களை நிரம்ப செய்து தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.