Skip to main content

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Tamil Nadu fishermen issue Chief Minister M.K.Stalin letter to the Union Minister

 

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

நாகை மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் திரிகோணமலையில் வைத்து, ஒரு படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், அந்தப் படகையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் இதேபோன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது மேலும் 10 மீனவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. IND-TN-06- MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 நாட்களில் மட்டும், 3 வெவ்வேறு சம்பவங்களில், 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள், பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிக்கிறது. இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களைத் தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் தலையீடும் ஆதரவும் இந்தப் பிரச்சனையை விரைவாகத் தீர்த்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைத் தரும்” எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்