Skip to main content

திரைப்படத்தின் பெயர் ‘பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா’ ஆனது!- வழக்கை ‘பைசல்’ செய்தது உயர்நீதிமன்றம்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

Tamil famous actress banumathi name film chennai high court

 

பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தயாரிக்கப்பட்ட  ‘பானுமதி ராமகிருஷ்ணா’ திரைப்படத்தை, இணையத்தில் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும், பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி தாக்கல் செய்துள்ள வழக்கில்,‘தனது தாயார், பானுமதி ராமகிருஷ்ணா பிரபலமான நடிகை. தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகள் கொண்டவராக திரையுலகில் வலம் வந்தவர். பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதினைப் பெற்றுள்ளார். தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த ‘கேமரா மேன்’ ஆன, தனது தந்தை பி.எஸ். ராமகிருஷ்ணா ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.   

 

Tamil famous actress banumathi name film chennai high court

 

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ‘பானுமதி ராமகிருஷ்ணா’ என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்துள்ளது. இப்படத்தை, இணையத்தளத்தில் வெளியிட இருக்கிறது. இப்படம் தொடர்பான ட்ரைலர் காட்சிகளில், தனது தாயாரின் இளமைக் காலத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்புபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்த திரையுலகத்தைச் சேர்ந்த நலவிரும்பிகள் பலர்,  இப்படத்தை, நான் தயாரிப்பதாகக் கூறி விசாரிக்கத் தொடங்கினர். 

 

இப்படத்தில் வரும் காட்சிகள், எனது தாயாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உள்ளன. ஆகவே, எனது தாயாரின் பெயரில் பானுமதி ராமகிருஷ்ணா என்ற தலைப்பில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். தாயாரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஒரு ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 

Tamil famous actress banumathi name film chennai high court

 

இந்த வழக்கு, நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பாளர்கள் சார்பில், பிரபலமான பெயருக்குக் காப்புரிமை கோரமுடியாது. படத்தின் பெயர் பொதுவான ஒன்றாகும். மனுதாரர் தாயாரின் வாழ்க்கையைத் தழுவிய கதையல்ல என்று வாதிடப்பட்டது. படத்தின் தலைப்பு தாயாரின் பெயராக இருப்பதுடன், டிரைலர் காட்சிகள் அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்று வாதிடப்பட்டது. 

 

இத்திரைப்படம், வரும் வெள்ளியன்று வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. படத்திற்குத் தடை விதித்தால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்படும். ஆகவே, படத்தின் பெயரை வேண்டுமானால் ‘பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா’ என மாற்றி வெளியிடுவதாக, தயாரிப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ரகுராமன் தெரிவித்தார். இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து, வழக்கை பைசல் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்