Skip to main content

“மணிப்பூரை காப்பாற்றுங்கள்..” - தமிழகத்தில் தொடரும் போராட்டம்!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

struggle in Tamil Nadu condemning incident to Manipur

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மலைகள் சூழ்ந்த பிரதேசம் மணிப்பூர் மாநிலம். இந்த மாநிலத்தை மத்தியில் ஆளும் பாஜக கட்சியே மணிப்பூரிலும் ஆட்சி செய்கிறது. மணிப்பூரில் பழங்குடியினர் மிக அதிகமாக வசித்து வருகிறார்கள். பல இனக் குழுக்கள் உண்டு. அங்கு மெய்தி என்ற இனக்குழு, தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. நீண்ட நாளாகப் பல்வேறு இனக் குழுக்களின் போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மணிப்பூர் நீதிமன்றம் மெய்தி இன மக்களின் கோரிக்கைக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு அறிவிப்பை செய்தது. அதன் பிறகு அங்கு பூர்வக் குடிகளாக உள்ள குக்கி பழங்குடியினர் தங்கள் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக போராட்டத்தில் இறங்கினார்கள். அந்த உரிமை போராட்டம் அரசியல் சூழ்ச்சியால் வேறு பல இனக் குழுக்களைத் தூண்டிவிட்டு வன்முறையாக மாறியது. மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக வன்முறை தீ பற்றி எரிகிறது.

 

அங்கு சிலர், ஒரு சாராரைத் தூண்டிவிட்டு மக்களை அடித்தும், நெருப்பில் எரித்தும், துப்பாக்கியால் கொலை செய்தும், பெண்களை ஈவு இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தும், பொதுவெளியில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தி மனித சமூகத்திற்கு ஒவ்வாத பல்வேறு கொடுமைகளை அங்கு நடத்தி வருகின்றனர். துயரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் வெளியே தெரியாதபடி மணிப்பூர் பாஜக அரசு மூடி மறைத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

 

இதன் ஒரு பகுதியாக குக்கி இனப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணமாக, பல நூறு பேர் மத்தியில் வீதிகளில் நடக்க வைத்து அவர்களைப் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து பெரும் துயரத்தை ஏற்படுத்தினார்கள் ஒரு பிரிவினர். அந்த வீடியோ காட்சிகள் சென்ற வாரம் வெளிவந்து இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அந்த துயர சம்பவத்தைப் பேச வைத்தது. ஆனால் இந்தியாவில் ஆளும் பாஜக மோடி அரசு, நீதி என்கிற அளவுகோலில் எந்த நடவடிக்கையும் இல்லாமல், எப்படியாவது இந்த பிரச்சனையைத் திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

 

மேலும், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மணிப்பூர் சம்பவத்தைப் பேச வேண்டும்; இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி பதில் சொல்ல வேண்டும்; நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் வந்து மோடி பதில் சொல்ல வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் பற்றி பாராளுமன்றத்துக்குள் பேச மறுத்ததோடு ஒரு வகையில் மறைந்திருப்பது போல் அவரது நடவடிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் அப்பாவி மக்களுக்கு நீதி கேட்டும், அங்கு வன்முறைகளை உடனே நிறுத்தக் கோரியும், அங்கு வாழும் மக்களுக்கு அமைதியை விரைவில் கொடுக்கக் கோரியும் இந்திய அளவில் பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு ஊர்களிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 

 

அந்த வகையில், தமிழகத்தில் மணிப்பூர் மக்களுக்காக ஊர்கள் தோறும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தமிழ்நாடு கிளை, கோவையில் மணிப்பூர் சம்பவத்திற்கு மத்திய பாஜக அரசைக் கண்டித்து 25 ஆம் தேதி கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் மணிப்பூரில் உள்ள குக்கி இனப் பழங்குடியினப் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் கோவையில் வசிக்கிற அல்லது அருகருகே இருப்பவர்கள் அங்கு ஒன்றாகக் கூடி, “மணிப்பூரை காப்பாற்றுங்கள்... மணிப்பூரை காப்பாற்றுங்கள்... மணிப்பூரில் வாழும் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள்....” எனக் கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

 

நாடு முழுவதும் வலுப்பெற்று வரும் குரல்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த பதிலும் கொடுக்காமல் மௌனமாகக் கடந்து போவது மக்களுக்குச் செய்கிற துரோகம் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என்பதே மனிதநேயவாதிகளின் கருத்தாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.