
உலகை அச்சுறுத்தும் கரோனா இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் நோய்தொற்றை கட்டுப்படுத்த அரும்பாடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 42 மருத்துவர்கள், இந்தியா முழுவதும் இதுவரை 1,427 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி பல நோயாளிகளும் உயிரிழந்த சூழலில் கரோனா தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி உள்ள மருத்துவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் விரைவாகவும், பெயிலில் வரமுடியாதவாறு கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் 15 நாட்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புப் பட்டை அணிந்து நோயாளிகளுக்கு இடையூறு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2008ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசாணையின்படி மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 4275 மருத்துவமனைகளிலிருந்து இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவுபெற்ற 37ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.