Skip to main content

வேப்பூர் பகுதியில் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்; காவல்துறை கருப்பு ஆடுகள் உதவியா?

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 Smuggling of Ration Rice Continues in Veypur Area- Are Police Black Goats Helping?

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் படி நேற்று (21.03.2023) மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கண்ணன், ஏழுமலை மற்றும் காவலர்கள் முருகானந்தம், ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் அமுதா என்பவரின் வீட்டின் அருகே வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் மூட்டையை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 50 கிலோ வீதம் 22 மூட்டைகளில் சுமார் 1,100 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சார்லஸ் (28) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார்  சார்லஸை கைது செய்தனர்.

 

 Smuggling of Ration Rice Continues in Veypur Area- Are Police Black Goats Helping?

 

இதேபோல் நேற்று முன்தினம் (20.03.2023) வேப்பூர் அடுத்த மலையனூர் கிராமத்தில் நள்ளிரவு 12 மணியளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சோதனை செய்ததில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது.

 

இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேப்பூர் அடுத்த மங்களூரைச் சேர்ந்த பொன்னன் மகன் பரமசிவம் (48), மலையனூரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சத்யராஜ்(28), அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம்(32), கட்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் கவியரசன்(32) ஆகிய நால்வரையும் சிறுபாக்கம் போலீசார் பிடித்து கடலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி வாகனத்தை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 Smuggling of Ration Rice Continues in Veypur Area- Are Police Black Goats Helping?

 

கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான வேப்பூர் பகுதியில் இதுபோன்று அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அரிசி கடத்தலுக்கு  காவல்துறையில் உள்ள சில 'கருப்பு ஆடுகள்' அரிசி கடத்தும் வாகனத்துடன் சென்று மாவட்ட எல்லையைத் தாண்டி விட்டு விட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக காவல்துறையினரும், மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டதாலேயே தொடர்ந்து அரிசி கடத்தல் பேர்வழிகள் சிக்கி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.