Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்; சேலத்தில் 10 பேர் கைது

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

 

8way

 

சேலத்தில், விவசாயம் மற்றும் வனவளத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்திய எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் இன்று (செப். 26, 2018) கைது செய்தனர்.

 


சேலம் & சென்னை இடையே எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புதிய வழித்தடம் அமைகிறது. 


இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குச் சொந்தமான, ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலம். இதனால், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 


இந்நிலையில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் பலர் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிடக்கோரி, கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தனர்.

 


இவ்வாறு கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்றுகூறி பள்ளப்பட்டி போலீசார் தடுத்தனர். ஆனாலும், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மக்களிடம் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறுவதில் ஆர்வம் காட்டினர். மக்களும் ஆர்வமாக வந்து, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களில் கையெழுத்திட்டனர். 

 


இதைப்பார்த்த போலீசார் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கையெழுத்து வேட்டையை உடனடியாக நிறுத்திவிட்டு கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கையெழுத்து இயக்கம் நடத்திய கூட்டமைப்பு நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போலீசார், கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.

 

 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''விளைநிலங்களை அழித்து, நிறைவேற்றப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டம் பொதுமக்களுக்கு ஏற்றது அல்ல. இது விவசாயத்தை அழிக்கும் திட்டம். எனவே இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, அதை முதல்வரிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஜனநாயக முறையில் கையெழுத்து இயக்கம் நடத்திய எங்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது,'' என்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
chennai mtc bus no 102 incident

சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய 102 ஆம் எண் கொண்ட சென்னை மாநகர அரசு பேருந்து ஒன்று அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நடுவழியிலேயே இந்த பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் பேருந்தின் மற்ற பகுதிகளில் மளமளவென தீப்பிடித்து. இதனால் பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைந்தனர். முன்னதாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு பாதுகாப்பாக இறங்கி விட்டனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கணவன் - மனைவி பிரச்சனை; பஞ்சாயத்து பேசிய அரசியல் பிரமுகர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
set fire to political figure who spoke on husband-wife issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எறையூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, இவரது மனைவி மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்தப் பெண், அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மாயா குடும்பத்தினர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென அதேகிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையின் கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சூசைநாதன் என்பவரிடம் சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சூசைநாதன், சின்னத்தம்பியை அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். அப்பொழுது சூசைநாதனுக்கும் சின்னதம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சமரசம் பேசிய சூசைநாதன் சின்னத்தம்பியை, மனைவியை வைத்து குடும்பம் நடத்து தெரியவில்லை எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, சின்னதம்பியை சூசைநாதன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாயத்து பேசிய சூசைநாதன் பேசிய பேச்சுகள் சின்னதம்பியை மனமுடைய செய்துள்ளது, மனைவியால் தனக்கு அவமானமாகிவிட்டதாக மன சஞ்சலத்தில் இருந்துள்ளார் சின்னதம்பி.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னதம்பி திங்கள் கிழமை அதிகாலை சுமார் 2.45 மணியளவில் சூசைநாதனின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார் சின்னதம்பி. வீட்டின் வெளியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது சின்னத்தம்பி தான் கொண்டுவந்திருந்த பெட்ரோலை ஊற்றியவர் சூசை நாதன் கண் விழித்து சுதாரிக்கும் முன்பே, தீ குச்சியை உரசி வீசியுள்ளார்.

சூசைநாதன் உடலில் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது, அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட சூசைநாதன் உடனடியாக சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சூசைநாதன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சூசைநாதன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சின்ன தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன்  மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறையூர் கிராமத்தில் கிருத்துவ தேவாலயம் உள்ளது தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர் திருவிழாவில் சமூக ரீதியான பிரச்சனைகள் தொடர்ந்து பலமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிருத்துவ தேவாலயம் பகுதி மக்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் தேர் பவனி வருதல் குறித்து சாதி ரீதியான கலவரம் நடந்தது.

இதில் அப்போது எஸ்பியாக இருந்த அமுல்ராஜ் தலைமையில் துப்பாக்கி சூடு நடைபெற்று பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரச்சனையில் சூசை தலையிட்டு நீதிமன்றம் வரை சென்று பட்டியலின மக்கள் சாமி வழி படுவதற்கான உரிமையை மீட்டு சமூக ஆர்வலராக செயல்படுகிறார். இதைப் பிடிக்காத ஒரு சில நபர்கள் அவர் மீது திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதல் நடத்த உதவியிருக்கலாம் என அவரது உறவினர்கள் மற்றும் விசிக கட்சியினர் இடையே சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.