Skip to main content

சேலத்தில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! கணவனுக்கு வலைவீச்சு!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்த இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த கணவனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மோகனேஸ்வரி (21). இவருக்கும், அல்லிக்குட்டை அருகே உள்ள மன்னார்பாளையத்தைச் சேர்ந்த கோபி (26) என்பவருக்கும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோபி, கட்டட வேலைக்குச் சென்று வருகிறார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் சிபு என்ற ஆண் குழந்தை உள்ளது.


பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட மோகனேஸ்வரி, கோவையில் குப்பையாபாளையத்தில் கணவருடன் வசித்து வந்தார். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

salem women incident husband escape police investigation

 

இந்நிலையில், கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். பின்னர் அவர், சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் ஜவுளி கடையில் வேலைக்குச் சென்று வந்தார். 


இதற்கிடையே கோபி, பலமுறை நேரிலும், செல்போன் மூலமும் மோகனேஸ்வரியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மோகனேஸ்வரி ஒத்து க்கொள்ளவில்லை. 


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இரவு 9 மணியளவில், மோகனேஸ்வரி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டை நோக்கி அவர் தார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் மறைந்து இருந்த கோபி, திடீரென்று அவரை வழிமறித்து, தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. 


ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகனேஸ்வரியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கோபி தப்பி ஓடிவிட்டார். 


இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மோகனேஸ்வரியின் தந்தை ராமலிங்கத்திடம் தகவல் அளித்தனர். அவர், இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 


கடந்த சனிக்கிழமை (நவ. 9) கோவையில் தான் வேலை செய்து வரும் இடத்தில் இருந்து சம்பளத்தை வாங்கிக்கொண்டு, எப்படியும் மனைவியை சமாதானம் செய்து கோவைக்கு அழைத்து வந்து விடுவேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு சேலம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அவர் மது குடித்துள்ளார். அதன்பிறகே மனைவியை வழிமறித்து சமதானம் பேசியிருப்பதும், அப்போதும் மோகனேஸ்வரி முரண்டு பிடித்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கோபியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வீராணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.