Skip to main content

இணங்க மறுத்தாள்; உயிரோடு எரித்துவிட்டேன்! ரவுடி கொடூரச் செயல்!!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

salem district mettur  - rowdy


தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த மூன்று குழந்தைகளின் தாயை உயிரோடு எரித்துக்கொன்ற கொடூரனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி மசக்காளியூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). பிரபல ரவுடி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து செந்தில்குமார் மேட்டூரில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை செய்து வந்தார். 
 


அப்போது கொளத்தூர் அய்யம்புதூரைச் சேர்ந்த பார்வதி (32) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. கணவனை இழந்த பார்வதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர், செந்தில்குமாரை அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்ததில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது.


இந்தநிலையில், மே 24ஆம் தேதி இரவு, பார்வதியைத் தேடி அவருடைய வீட்டுக்கு செந்தில்குமார் சென்றார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, பார்வதி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, கதவைத் தாழிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 


அடுத்த சில வினாடிகளில் உடல் முழுவதும் தீ மளமளவென பரவியதால், வலி தாங்க முடியாமல் பார்வதி அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அவர் மீது மண்ணைக் கொட்டியும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். 
 


பலத்த தீக்காயம் அடைந்த பார்வதியை மீட்டு, உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்களன்று (மே 25) அவர் உயிரிழந்தார். 


பார்வதியை உயிரோடு கொளுத்திய ரவுடி செந்தில்குமாரை பொதுமக்களே பிடித்து கொளத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


பார்வதியை உயிரோடு எரித்துக் கொன்றது ஏன் என்பது குறித்து செந்தில்குமார் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


பார்வதியின் கணவர், உடல் நலமில்லால் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். என் மனைவியும் என்னைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் எனக்கும் ஒரு பெண் துணை தேவைப்பட்டதால், கறிக்கடையில் வேலை செய்து வந்தபோது பார்வதியுடன் பேச்சுக்கொடுத்தேன்.


அவளும் என்னை நம்பினாள். இதையடுத்து நாங்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து 'நெருக்கமான உறவில்' இருந்தோம். இந்நிலையில்தான், சம்பவத்தன்று இரவு பார்வதி வீட்டுக்குச் சென்றேன். அவரை ஆசைக்கு இணங்க அழைத்தேன். ஆனால், தன்னுடைய மூன்று குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், அதனால் என் ஆசைக்கு இணங்க முடியாது என்றும் கூறினார். 


அதேநேரம், பார்வதிக்கு மேலும் சில பேருடன் நெருக்கமான தொடர்பு இருப்பது எனக்குத் தெரிய வந்தது. இதைப்பற்றி எல்லாம் கேட்கும்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்படும். சம்பவத்தன்றும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரத்தில் பார்வதியை உயிரோடு எரித்துக் கொன்று விட்டேன். இவ்வாறு செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

http://onelink.to/nknapp

 

கொல்லப்பட்ட பார்வதியின் சொந்த ஊர், ஆந்திர மாநிலம் ஆகும். இவருடைய கணவர் முருகன், கொளத்தூரைச் சேர்ந்தவர். ஆந்திராவில் கல் உடைக்கும் வேலைக்குச் சென்றிருந்தபோது ஏற்பட்ட பழக்கத்தில் முருகன், பார்வதியைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். 

 


தற்போது பார்வதி எரித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, அவருடைய மூன்று குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காவல்துறையினர், செந்தில்குமாரை சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்