
கன்னியகுமாரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த மதபோதகர் ஜான்ரோஸ் என்பவர் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இந்த ஜெபக்கூடத்திற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகை புரிந்து ஜெபக்கூட்டத்தில் பங்கேற்றுச் செல்கின்றனர். இந்த நிலையில் ஜெபக்கூடத்திற்கு வந்த 13 வயது சிறுமியை மதபோதகர் ஜான்ரோஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவர் மதபோதகர் ஜான்ரோஸ் நடத்தும் ஜெபக்கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது ஜான்ரோஸ் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுமியை அவரது பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே மதபோதகர் ஜான்ரோஸ் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்த போலீசார் கோவை அருகே குடும்பத்துடன் பதுங்கி இருந்த ஜான்ரோஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் ஜான்ரோஸுக்கு உடந்தையாக இருந்ததற்காக அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.