
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே உள்ள மருதடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் பிரவீன்குமார் (23). இவர் மருதடி கிராமத்திலிருந்து பாடாலூர் நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் அதே வழியாக வந்த டிப்பர் லாரி, திரும்பி மாற்று பாதையில் செல்ல முயன்றது.
அப்போது பைக்கில் வந்த பிரவீன்குமார் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.