Skip to main content

“ஆளுநராக இருப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட ரவிக்கு இல்லை” - துரை வைகோ 

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
 Ravi doesn't even have the basic qualifications to be a governor says Durai Vaiko

ம.தி.மு.க சார்பில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் விழா நேற்று (12-ந்தேதி) திங்கட்கிழமை திருச்சியில் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கிப்பேசினார்.

விழாவில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ தேர்தல் நிதி பெற்று சிறப்புரையாற்றினார். இதில் பொருளாளர் செந்திலதிபன், வழக்கறிஞர் சின்னப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு.டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம், மாத்தூர் கலியமூர்த்தி, ஆசை சிவா, ஜெயசீலன், ராமநாதன் ஆகியோர் நிதி வழங்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 

இதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துரை வைகோ, சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதைத் தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதை முரண்பாடு என்கிறார். தலைவர்கள் பெயரைத் தவிர்த்து உரையை வாசித்தார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த  விடாமல் செய்து வருகிறார். அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட இல்லை. அரசை செயல்பட விடாமல் செய்கிறார். மத்திய பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ. அரசின் தலையீடு உள்ளது.

லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம். நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று கூறுவது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரிபொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எரிபொருளுள் விலை உயர்வுதான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம். பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதால், மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்