திண்டுக்கல்லிற்கு வருகை தந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திண்டுக்கல் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உள்பட அதிகாரிகளுடன் பணிகளை ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் தற்பொழுது ஆவின் நிர்வாகம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையாக செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளைத் தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டிங்கில் உள்ள பிரச்சனைகளை சீர் செய்ததன் காரணமாக தற்பொழுது 8% விற்பனை பெருகி உள்ளது. இந்த மாதம் கணக்கிட்டுப் பார்த்தால் மேலும் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது எனக் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி விற்பனையாளர்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆவின் மூலம் கையாளப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்கள் கையாளுகின்ற அளவினைப் பெருக்குவதற்காகப் பல்வேறு பகுதிகளில் இன்றைக்குப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே ஆவினுடைய கொள்முதலைக் கையாள்வதற்கான திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையோடு மிகச் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்குப் பல லட்சக் கணக்கான கறவை மாடுகள் புதிதாக வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடனுக்கான ஏற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம்.
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தற்பொழுது பட்டர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான கடன் உதவி மானியங்களை வங்கிகளில் பேசி குறைந்த வட்டிக்குக் கடனும் பெற்றுத் தந்து வருகிறோம். நாட்டு இன மாடுகள் அழிந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து நாட்டு இன மாடுகளை விவசாயிகளுக்குக் கண்டறிந்து கொடுக்க இருக்கிறோம்.” என்று கூறினார்.