
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கைதியை அழைத்து வந்த காவலர் பயிற்சி செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகை வாசன். வழக்கு ஒன்று தொடர்பாக பெரம்பலூர் போலீஸ்சாரால் கிருத்திகை வாசன் கைது செய்யப்பட்டிருந்தார். சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவ சிகிச்சையில் உள்ள கைதியுடன் காவலுக்காக போலீசார் ஒருவரும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி பெரம்பலூர் காவல்நிலைய காவலர் இளம்ராஜா காவல் கண்காணிப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம் காவலர் இளம்ராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவலர் இளம்ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.