Skip to main content

பைக்கில் மதுபாட்டில்களை கடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது!!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

Police arrest people for smuggling liquor on a bike

 

திண்டிவனம் அருகே பைக்கில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 792 போலி மது பாட்டில்கள், பைக், விஷ சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வெள்ளிமேடுபேட்டையை அடுத்த கொடிய கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

 

அப்போது திண்டிவனத்தில் இருந்து வெள்ளிமேட்டுப்பேட்டை நோக்கி வேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, போலீசாரைப் பார்த்தவுடன் தப்பிச் செல்ல முற்பட்டனர். இருவரையும் துரத்திப் பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டிவனத்தை அடுத்த எறையானூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றவர் புதுச்சேரி மாநிலம், கிழக்கு சாரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வாகனத்தின் முன்புறம் வெள்ளைநிற சாக்கு மூட்டையில் 20 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். மேலும், அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் புதுச்சேரியில் ஒரு நபரிடமிருந்து தமிழகத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய MC DOWELLS (for sale Tamilnadu only) மது என்ற லேபிள்கள் ஒட்டிய பிராந்தி பாட்டில்களை வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும், வெள்ளிமேடுபேட்டையை அடுத்த கீழ்மாவிலங்கை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அன்பழகன் என்பவருடன் சேர்ந்து, அவர் குத்தகைக்கு பயிர் செய்யும் மணிமாறன் நிலத்தில் உள்ள புதர்களில் மறைத்து வைத்துள்ளார். பெலாகுப்பம் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருடன் சேர்ந்து விற்பனை செய்ததாகவும், தற்போது ஊரடங்கு காரணமாக அரசு மதுபானக் கடைகள் மூடியிருப்பதால், இந்தப் போலி மது விற்பனையால் தங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர். 

 

இதனையடுத்து நான்கு பேரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து 792 பிராந்தி பாட்டில்கள், இருசக்கர வாகனம், விஷநெடி சாராயம் ஆகிவற்றைப் பறிமுதல் செய்தனர். சமீபகாலமாக விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, போலி மதுபானங்கள் ஆகியவை அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்தாலும், உள்ளூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசாரின் துணையுடன் இது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 15,000 லிட்டர் எரிசாராயம் செஞ்சியில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. காலியான மது பாட்டில்களை விலைக்கு வாங்கி, அதில் விஷ சாராயத்தை கலர் சாயம் கலந்து நிரப்பி போலி லேபிள்களை ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளிமேடு பேட்டை பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை உள்ளதா என போலீசார் சோதனை செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.