![Caste wise census - separate decision today](/modules/blazyloading/images/loader.png)
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
![Caste wise census - separate decision today](/modules/blazyloading/images/loader.png)
ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
![Caste wise census - separate decision today](/modules/blazyloading/images/loader.png)
இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.