Skip to main content

பிளஸ் 2 மாணவி கர்ப்பம்; காதலன் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்தது போக்சோ!

Published on 24/04/2022 | Edited on 24/04/2022

 

Plus 2 student pregnancy; Pocso jumped on two including boyfriend!

ஆத்தூர் அருகே, பிளஸ்2 மாணவியை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய காதலன் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (43). இவருடைய உறவினர் திவாகர் (33). இவர், முள்ளுவாடியில் கணினி பழுதுபார்ப்பு மையம் நடத்தி வருகிறார். மேலும், புதுச்சேரியிலும் இதேபோல் பழுதுபார்ப்பு மையம் வைத்துள்ளார். திவாகருக்கு, முள்ளுவாடியைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. இதில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உடல் ரீதியாகவும் 'நெருங்கிப் பழகி' வந்துள்ளனர். இந்த நெருக்கத்தில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

 

கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால், விவகாரம் ஆகி விடும் என பயந்த திவாகர், தனது உறவுக்காரர் சங்கர் உதவியுடன் அந்த மாணவியை சென்னைக்கு அழைத்துச்சென்று சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். இதுகுறித்து ஆத்தூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திவாகர், சங்கர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

 

மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, அவருடன் திவாகர் பலமுறை வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மாணவி, 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி என்பதால் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் திவாகர் மற்றும் கட்டாய கருக்கலைப்பு குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சங்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்