![The person who killed the brother-in-law! The court announced the sentence!](http://image.nakkheeran.in/cdn/farfuture/yUasN1alSCc4MiLhn8EGSOlRp3qoOV0HELdl8p6MWjM/1647066781/sites/default/files/inline-images/th-0_0.jpg)
கிருஷ்ணகிரி அருகே, சொத்துத் தகராறில் அண்ணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் மாதையன் (47). விவசாயி. இவருடைய அண்ணன் ராஜா. சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதையடுத்து ராஜாவின் சொத்துகளை அவருடைய மனைவி மாது (45) சொந்த பொறுப்பில் பராமரித்து வந்தார். இந்நிலையில் அண்ணன் இறந்துவிட்டதால் அவருடைய சொத்துகளை அடைய மாதையன் திட்டம் போட்டார். இதையடுத்து, மாதையன் அவருடைய அண்ணி மாதுவிடம் சொத்துகளை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி ஏற்பட்ட தகராறில், மாதையன் தனது அண்ணி என்றும் பாராமல் மாதுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், மார்ச் 10ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
சொத்துக்காக அண்ணியை கொன்ற மாதையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி லதா தீர்ப்பு அளித்தார். அபராதத் தொகை செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.