Skip to main content

வீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்!!!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
perambalur



பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் 38 வயது சரீஷ்குமார். இவர் மரசெக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி 35 வயது பேபி. நிறைமாத கர்ப்பிணியான பேபிக்கு கடந்த 17ஆம் தேதி அவரின் வீட்டிலேயே சுகபிரசவம் நடந்துள்ளது. அதில் பேபிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


இந்த தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அதோடு பேபியையும் அவரது குழந்தையையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதார துறையினருக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் நீண்ட விவாதம் நடந்துள்ளது. ஆனாலும் மருத்துவமனைக்கு வர முடியாது என குழந்தை பெற்ற பேபி பிடிவாதமாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் தம்பதிகள் இருவரும் பிறந்த குழந்தையுடன் குடியிருந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர்.

 

 


இந்த நிலையில் அவர்கள் ஒரு வீடியோ ஒன்று பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் நானும் எனது குழந்தையும் நலமாக இருக்கிறோம். அப்படியிருந்தும் சுகாதாரத்துறையினர் போலீசாரை வைத்து எந்த அடிப்படையில் என்னையும், என் குழந்தையையும் கைது செய்வார்கள். மருத்துவமனையில் சேர்ந்தே ஆகவேண்டும் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? ஜனநாயக நாட்டில் இயற்கையாக வீட்டில் குழந்தை பெற்றது குற்றமா? எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே எனது உடல்நிலையை மோசம் ஆக்கிவிட்டனர் என்று கணவன், மனைவி இருவரும் வீடியோ காட்சியில் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தம்பதியினர் மீது உரிய விசாரணை நடத்தக்கோரி சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட காவல்துறை அதிகாரி நிஷா பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்