
கடலூர் மாவட்டம் கடைக்கோடி இறுதியில் உள்ளது கீழக்கல்பூண்டு. இந்த பகுதியிலிருந்து சிறுபாக்கம் செல்லும் சாலையானது கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, ஒரங்கூர், சிறுபாக்கம் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் சிதறிக் கிடக்கின்றன. இந்த வழியாகத்தான் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் மங்களூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல வேண்டும். மற்றும் அருகில் உள்ள நகரங்களான கள்ளக்குறிச்சி, வேப்பூர், சின்னசேலம் ஆகிய ஊர்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது.
இந்த சாலையில் அரசுப் போக்குவரத்து பேருந்து மற்றும் தனியார் மினி பஸ் வருகின்றன. அவசரத் தேவைக்காக இருசக்கர வாகனங்களில் இந்த சாலையில் பயணிக்கின்றனர். சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். இதனால் நெடுஞ்சாலைத்துறை, மங்களூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக அவசர கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.