Skip to main content

ஆணையரின் எச்சரிக்கைக்கு பிறகும் அலட்சியம் காட்டும் உரிமையாளர்கள்! தொடரும் பலிகள்! 

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

Owners who ignore the Commissioner's warning! Continuing sacrifices!
                                                        மாதிரி படம் 

 

கும்பகோணம் பிரதான சாலைகளில் மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது தொடர்கதையாகிவருகிறது. 

 

சமீபத்தில்கூட கும்பகோணம், துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தனியார் இருசக்கர வாகன கம்பெனி ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், வேலையை முடித்துவிட்டு கும்பகோணம் செல்வம் தியேட்டர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் கருப்பு நிறத்தில் மாடு படுத்திருந்தது தெரியாமல், மாட்டின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மணிகண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கும்பகோணம் நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்துவருகின்றனர். நகராட்சி பகுதியில் வசிக்கும் பலர் தினசரி வருமானத்திற்காக எருமை மற்றும் பசுமாடுகளை வளர்த்துவருகின்றனர். மாடுகளை வளர்ப்போரில் பெரும்பாலானோர் மாடுகளைக் கட்டுவதற்கு கொட்டகை வசதி இல்லாமலேயே வளர்த்துவருகின்றனர். மாடுகளின் கரவை நேரம்போக மீதி நேரம் வீதிகளில் விடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

 

இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஊழியர் ஒருவர் கூறுகையில், "நகராட்சி பகுதியில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் ஆயிரக்கணக்கான மாடுகளை வளர்க்கின்றனர். ஒரு வீட்டிற்கு பத்து மாடுகளுக்கு குறைவில்லாமல் வளர்த்தாலும், அதனைக் கட்டுவதற்கு தொழுவத்திற்கான இடவசதி இல்லாமலேயே வளர்க்கின்றனர். கரவை நேரத்தில் மாடு எங்கே நிற்கிறதோ அங்கு சென்று பால் கறந்துகொண்டு அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த மாடுகள் நகரத்தில் குவிந்துகிடக்கும் பேப்பர்கள், அழுகிய காய்கறிகள், கீரைகளைத் தின்றுவிட்டு பிரதான சாலைகளிலேயே இரவு, பகல் பாராமல் படுத்துக்கிடக்கும். கொட்டகை வைத்திருக்கும் சிலரும் பால் கறந்ததும் மாடுகளை அவிழ்த்துவிட்டுவிடுகின்றனர். இதனால், கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. 

 

Owners who ignore the Commissioner's warning! Continuing sacrifices!
                                                         மணிகண்டன்

 

அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடக்கூடிய நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் என பிரதான சாலைகளிலும் மக்கள் அடர்த்தியாகக் குடியிருக்கும் பகுதிகளிலும்தான் மாடுகள் வரிசையாக படுத்துக் கிடக்கும். இரவு நேரங்களில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்துவருகிறது. அதோடு, நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் கூட சாலையில் படுத்துக் கிடக்கும் மாடுகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையும் அடிக்கடி நடந்திருக்கிறது" என்கிறார் ஆதங்கமாக.

 

அடிக்கடி விபத்து ஏற்படுவது குறித்து நகராட்சி ஆணையரிடம் சிலர் புகார்கள் அளித்தனர். புகாரின் பேரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினார். ஆனாலும், ஆணையரின் எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் வழக்கம்போல் மாடுகளை வீதிகளிலேயே விட்டுவருகின்றனர்.

 

இரண்டு வாரத்திற்கு முன்பு கும்பகோணம் போலீசாரின் பாதுகாப்போடு நகராட்சி அதிகாரிகள் கும்பகோணம் முக்கிய சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து பழைய நகராட்சி அலுவலகத்திற்குக் கொண்டுவந்து, பிறகு வேன் மூலம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வாணாதிராஜபுரத்தில் உள்ள மடத்திற்குச் சொந்தமான கோசாலையில் கொண்டுவந்து விட்டனர். அதன்பிறகும் மாடுகளைச் சாலைகளில் விடுவதை நிறுத்தவில்லை. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

 

கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இறப்புகளும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் மோதி, இரண்டு பேர் உயிரிழந்தனர். அதேபோல, போலீஸ் ஒருவரும், மாடு குத்தியதில் படுகாயமடைந்தார். இப்படி மாடுகளால் தொடர் அசம்பாவிதம் நடந்தபடியே இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலைகளில் இடையூறாக திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் விட வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.