தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண்; என் மக்கள் என்ற நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் - திருச்சுழி – காரியாபட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (9 ஆம் தேதி) நடைப்பயணத்தைத் தொடங்கினார். அப்பொழுது விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவியிருந்த பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் அகற்றியதைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்து, நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து திருச்சுழியில் உள்ள ரமண மகரிஷியின் இல்லத்திற்கு அண்ணாமலை சென்றார். அங்கு இருந்தவர்கள் ரமண மகரிஷியின் பிறப்பு மற்றும் அந்த இல்லத்தின் பெருமைகளை அவரிடம் எடுத்துக் கூறினர். பின்னர் அந்த இல்லத்தில் அண்ணாமலை தியானம் மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள கோவிலுக்குச் சென்று அங்கு அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நாட்டா, தமிழ்நாட்டு மக்கள் ஆகியோர் பெயரில் அர்ச்சனை மேற்கொண்டார். அதன் பிறகு அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை கொடுக்கப்பட்டது. பிரசாதமும் வழங்கப்பட்டது.