
இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்து கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனுப்பும் மாநிலத்திற்கும், ஏற்றுக்கொள்ளும் மாநிலத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே அழைக்கலாம். அழைத்துச் செல்ல பயன்படுத்தும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து தனிநபர் இடைவெளி போன்றவற்றை கடைபிடிப்பது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறப்பு ரயில்களை இயக்கி அதன் மூலம் வெளி மாநிலங்களில் உள்ளவர்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதோடு அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என தலைமை செயலர் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலர் சண்முகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், அதேபோல் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.