Skip to main content

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; மூடி மறைத்த அரசு அலுவலர்கள்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

One person was electrocuted while illegally fishing in lake

 

திருவண்ணாமலை அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருபவர் பச்சையப்பன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மணிலா பயிரிட்டு வருகிறார். இவரது நிலத்திற்கு அருகாமையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்றும் உள்ளது. இந்த ஏரியில் பச்சையப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து திருட்டுத்தனமாக மீன்பிடித்து அதனை வெளியே விற்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

 

ஜூலை 1 ஆம் தேதி காலை பச்சையப்பன் தனது மகன் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் வருவான் வடிவேலனை அழைத்துக் கொண்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் உள்ள மீன்களைப் பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற எலக்ட்ரீசியனை வேலைக்காக அழைத்துக் கொண்டு டிராக்டர் உதவியுடன் தனது நிலத்தில் இருந்து ஏரிக்கு பைப்பு விட்டு, மோட்டார் மூலமாக ஏரியிலிருந்து நீரை உறிஞ்சும் வேலையை செய்துள்ளனர்.

 

அப்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் செல்லக்குட்டி தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பச்சையப்பனும் அவரது மகனும் உடனடியாக எலக்ட்ரீசியன் செல்லக்குட்டியை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்லும் பொழுது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியிலிருந்து கள்ளத்தனமாக மீன் பிடித்து விற்பனை செய்ய, வேலைக்காக சென்ற எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிர் இழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இது குறித்து புகார் ஏதும் அளிக்கப்படாததால் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் காவல்துறையினர், கட்டப்பஞ்சாயத்தினர் இணைந்து திருட்டு மீன் பிடித்து ஒருவர் இறக்க காரணமாக இருந்தவர்களிடம் லட்சத்தில் பேரம் பேசி பணம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத மீன் பிடித்தபோது ஒருவர் இறந்துள்ளார். இதுகுறித்து அந்த கிராம நிர்வாக அலுவலர் புகார் தந்திருக்க வேண்டும், அந்த கிராமத்துக்கான காவல்துறை அலுவலர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டும், கிராமப் பஞ்சாயத்து செயலாளர், பொதுப்பணித்துறை அலுவலருக்கு தகவல் சொல்லியிருக்கவேண்டும். அப்படி எதுவுமே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.